வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் உள்ள வீடு ஒன்றில் 8 நாட்களாக தனிமையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த வயோதிப தாய் ஒருவர் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு வதாவது,
வவுனியா, குருமன்காடு, காளிகோவில் வீதியில் உள்ள வீடு ஒன்று கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்டு இருந்துள்ளது.வீட்டின் முன் வாயிற் கதவுகள் என்பனவும் பூட்டப்பட்டிருந்துள்ளது. இதன்போது அந்த வீட்டில் வசிக்கும் முதிய தாயாரை பூட்டபட்ட வீட்டு வளவுக்குள் கண்ட அயல் வீட்டுக்காரர் அவ்வப்போது வாயிற்கதவு ஊடாக உணவினை வழங்கியிருந்தனர்.
நேற்றுமுன்தினத்தில் இருந்து வீட்டில் குறித்த தாயாரின் நடமாட்டத்தை காணவில்லை. இதனையடுத்து சந்தேகம் அடைந்த அயலவர்கள் ஊடகவியலாளர்கள் இருவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த நிலமைகளை அவதானித்த பின்பு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் தமிழ் முறைப்பாட்டு பிரிவுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ண விஜயமுனி தலைமையிலான குழுவினர் வீட்டு மதில் ஊடாக உள்நுழைந்து, வீட்டின் கதவைத்திறந்து, அங்கு இயலாத நிலையில் தள்ளாடியபடி இருந்த குறித்த தாயாரை மீட்டுள்ளனர்.
குறித்த தாயாரின் உடல்நிலை மோசமடைந்திருந்தமையால் பொலிசார் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க இ.செல்வநாயகி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டவராவார்..
இவரது கணவன் மற்றும் மகன் ஆகிய இருவருமே இவரை 8 நாட்களாக தனிமையில் வீட்டுச் சென்றுள்ளனர் என்பதும் வீடு பாழடைந்த நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
