சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின்னர், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது எரிபொருள் விலையை திருத்துவது உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளது.
முன்னர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக்கொள்வது அல்லது நஷ்டத்தை ஈடுசெய்ய விலையை திருத்துவது குறித்து இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளது.
கடைசியாக ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்.
இதேவேளை, மேற்கு ஆசியப் போர் தொடங்கிய பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டாலும், சர்வதேச சந்தையில் நிலவும் விலை உயர்வு மற்றும் அதிகரித்துள்ள காப்புறுதி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் பாரிய சவாலாக மாறியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.