விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? இந்துக்கள் அதிகமாக வாழும் இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான்.

கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம்தான் புத்த பகவான். பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள் சொந்த மதத்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் மற்றும் சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது, மத வேற்றுமைகளைக் களைவதன் ஊடாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன், விரைவில் இந்து மத தலைவர்களையும், பௌத்த மத தலைவர்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவது தொடர்பாகவும் அவதானம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts