விவசாயத்துறையில் தன்னிறைவு பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விவசாயிகளின் தேவைகளை அறிந்து உள்ளீடுகளை வழங்கி மேலதிகமான உற்பத்திகளின் மூலம் ஏற்றுமதிகளை அதிகரிக்கலாம்.
இதன்மூலம் உற்பத்தியின் தரத்தோடு, எமது தனித்துவமான விளைபொருட்களை உலகளவில் கேள்விகளை அதிகரித்து கொள்ளலாம்.
இந்த இறுதிக் காலாண்டின் 3 மாதகால செயற்திட்ட நடைமுறைகளுக்காகவும், கால போக, பெரும் போக நெற்செய்கை மற்றும் மேட்டு நிலப் பயிர்ச்செய்கைகளுக்காகவும் விவசாயிகளினது எதிர்காலத்திற்காகவும் கமத்தொழில் அமைச்சு 50 சதவீத மானியத்துடன் 252 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளது.
உற்பத்தி வலையங்கள் உருவாக்கப்பட்டு, செயல்முறையாக்கப்பட்டுள்ளதுடன், உருளைக்கிழங்கு செய்கைக்காக 76 மில்லியன் ரூபா மானியதிற்காக வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் உழுந்து 16 ஆயிரம் ஏக்கரில் 60 மில்லியன் ரூபாவில் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. செயற்படுத்தப்பட்டிருக்கும் உற்பத்தி வலயங்கள் ஊடாக அறுவடைகள் அதிகரிக்கும் போது இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, நிரந்தர விலைகளை நிர்ணயித்து ஏற்றுமதி வாய்ப்புக்களை வழங்கலாம்” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.