Ad Widget

வித்தியா கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றிலேயே நடத்த கோரி போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க வேண்டும் என இன்றைய போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன்போது, ‘சேயாவிற்கு ஒரு நீதி, வித்தியாவிற்கு ஒரு நீதியா?’, ‘காவுகொள்ளப்பட்ட எம் உயிருறவுகளுக்கு நீதி வேண்டும்’, ‘தமிழ் அரசியல் தலைமைகளின் மௌனம் ஏன்?’, ‘பணமும் பதவிகளும் தமிழர்களை முடக்கலா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் இன்றைய போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

யாழ். மேல் நீதிமன்றில் தற்போது நடைபெற்று வரும் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகளை விசேட அமர்வுகள் மூலம் விசாரிப்பதற்கு கொழும்பிற்கு மாற்றுவதால் குறித்த வழக்கின் தீர்ப்பு திசை திருப்பப்படலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts