Ad Widget

வித்தியாவின் படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 3 மாதங்களுக்கு நீடிப்பு

கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியலை எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் தகதி வரை யாழ். மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

வித்தியாவின் கூட்டு வன்புணர்வு படுகொலைச் சந்தேக நபர்கள் 9 பேர் மீதான வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி வழக்கில், 9 சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மேற்படி வழக்கில், அரச சட்டத்தரணி பொலிஸ் மரண விசாரணைகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு ஆராயப்பட்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி யாழ். மேல் நீதிமன்றில் தெரித்தார்.

அதேவேளை, 4, 7, 9 ஆகிய சந்தேகநபர்களுக்கு சட்டத்தரணி சரத்வெல்கம் மன்றில் பிணை மனு கோரிய நிலையில் வழக்கின் பாரதூரத்தினை கருத்திற்கொண்டு பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை கடந்த 2009 ஆம் ஆண்டு ஆடி மாதம் கைதடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்த ஊமைப் பெண்ணை கற்பழித்த 04 நபர்களுக்கு 15 ஆண்டு கடூழிய சிறையில் வைக்குமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன் குற்றவாளிகளுக்கு தலா 25 ஆயிரம் அபராதமாகவும் தலா 05 லட்சம் ரூபா நட்ட ஈடாகவும் கொடுக்குமாறும் அவற்றினை செலுத்த தவறினால் மேலதிகமாக இரண்டரை வருடங்கள் சாதாரண சிறைச்தண்டணை வழங்குமாறும் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார்.

Related Posts