Ad Widget

விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்க முடியாது!! – அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மூலமாக போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த யோசனைக்கு அமைச்சரவையில் ஏனைய அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, பல படுகொலைகளை மேற்கொண்ட புலிகளின் குடும்பத்தாருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டுமா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சரவையின் அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் சுவாமிநாதன் குறித்த நட்டஈடு தொடர்பான யோசனையை மும்மொழிந்து, நேற்று இது தொடர்பான அனுமதி கோரலினை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts