Ad Widget

வவுனியாவிலுள்ள மிகப்பெரும் நெற் களஞ்சியசாலை இராணுவத்தினரால் விடுவிப்பு!

1997ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் வசமிருந்த வவுனியாவின் மிகப்பெரும் நெற்களஞ்சிய சாலை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நெற்களஞ்சிய சாலையை விடுவிக்குமாறு வவுனியா மாவட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இந் நிலையில் நேற்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ரோகண புஸ்பகுமார மற்றும் மாவட்ட விசாய பணிப்பாளர் ஆகியோர் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலையை சென்று பார்வையிட்டுள்ளனர்.

விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனை விடுவிப்பதாக வவுனியா அரச அதிபர் கூறினார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய நெற்களஞ்சிய சாலை இதுவே என்று தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட விவசாயப் பணிப்பாளர், இக் களஞ்சியசாலை விடுவிக்கப்பட்டமையால் மாவட்டத்தில் நெல்லை களஞ்சியப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தனது மகிழச்சியை வெளியிட்டுள்ளார்.

கடந்த பல வருடங்களாக இந்த நெற்களஞ்சியசாலை இராணுவத்தின் முகமாக இருந்தமையினால் தாம் பெரும் துன்பங்களையும் நஷ்டங்களையும் எதிர்நோக்கியதாக குறிப்பிடும் விவசாயிகள், இதற்காக தொடர்ச்சியாக சளைக்காது குரல் எழுப்பி போராடி வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

போர்க்கால கட்டத்தில் நெற்களஞ்சியசாலை அமைந்திருக்கும் வீதி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாத நிலை காணப்பட்டதுடன் குறித்த வீதி ஊடாக போக்குவரத்து செய்வது அபாயம் மிக்கமாகவும் காணப்பட்டது. இதனால் குறித்த பகுதியை அண்டியிருந்தவர்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts