Ad Widget

வளலாயில் மீள்குடியமர இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவு

RegPenவலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வளலாய் (ஜே 284) பகுதியில் மீள் குடியேறுவதற்கு இதுவரையில் 129 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலாலி கிழக்கு (ஜே 253), பலாலி வடக்கு (ஜே 254), மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் (ஜே 284) ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வேறு இடங்களில் வசித்துவரும் மக்கள் தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேறுவதற்கு கிராம அலுவலர்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், வளலாய் பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்கு 129 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேர் இதுவரையில் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த மேற்படி பிரதேசத்தின் ஒரு சதுர கிலோமீற்றர் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி இராணுவத்தினரால் அச்சமயம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த இமெல்டா சுகுமார் ஊடாக கோப்பாய் பிரதேச செயலகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்தப் பிரதேசங்களில் காணப்பட்ட கண்ணிவெடிகள் காரணமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் மேற்கொண்டு வந்திருந்தன.

ஆனால், அவ்விடத்தில் முழுமையாக கண்ணிவெடிகள் அகற்றியமைக்கான சான்றுப்பத்திரம் பிரதேச செயலகத்திடம் இதுவரையிலும் கையளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

Related Posts