Ad Widget

வலி.வடக்கு மக்கள் அரசிற்கு எச்சரிக்கை!!

சித்திரைப் புது வருடத்திற்குள் வலி.வடக்கில் மீள்குடியேற்றம் செய்யாவிடின், வெள்ளைக் கொடியுடன் வலி வடக்கிற்குள் அத்துமீறி நுழைவோம் என வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் சூளுரைத்துள்ளனர்.

வலி.வடக்கு நலன்புரி நிலைய பொது நிர்வாக அமைப்பினரின் ஏற்பாட்டில், யாழ். சபாபதிபிள்ளை மற்றும் கண்ணகி நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

அந்த உண்ணாவிரத போராட்டத்தின் போதே இவ்வாறு மக்கள் மிக வேதனையுடன் சூளுரைத்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் நண்பகல் வரை மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த உண்ணாவிரதத்தில் 3 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்புச் செய்ய வேண்டாம், எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் விரைவில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் நலன்புரி நிலைய மக்களுக்கான வாழ்வாதாரங்களை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6 மாதத்திற்குள் வலிவடக்கில் மீள்குடியேற்றம் செய்து. வலிவடக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தருவேன் என கூறினார்.

ஆனால், பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக புனரமைப்புச் செய்வதற்கு வலிவடக்கு மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுமென்றும், அதை யார் எதிர்த்தாலும், பலாலி விமான நிலையம் விஸ்தரிப்புச் செய்யப்படுமென்று பாதுகாப்பு அமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் கருத்துக்கள் தம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக மக்கள் சுட்டிக் காட்டினார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 மாத காலத்திற்குள் தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வார் என நம்பிக்கையுடன் இருந்தோம்.

ஆனால், பலாலி விமான நிலையத்தினை விஸ்தரிப்புச் செய்வோம் என கூறியதன் பின்னர் ஜனாதிபதியின் வார்த்தையில் நம்பிக்கை இழந்துவிட்டோம்.

அத்தியவசிய பிரச்சினைகளான மலசல கூடங்கள் பாவிப்பதில் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை உட்பட இளம் பெண்களுக்கு திருமணம் செய்வதில் பிரச்சினை, சமூக கலாச்சார பிரச்சினைகளை எதிர்நோக்கும் தம்மை உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், தமது சொந்த இடத்திற்கு சென்று தாங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து நிம்மதியான வாழ்க்கை வாழ்வோம் என்றும் அம்மக்கள் தெரிவித்தனர்.

உங்கள் பிள்ளைகளை போன்று எங்கள் மீதும் கருணை கொண்டு, உடனடியாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் மந்தபோக்கே தமது மீள்குடியேற்ற தாமதத்திற்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, இதுவரை காலமும், சுமார் 26 வருடங்களுக்கு மேலாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் தம்மை ஜனாதிபதி கருணை கொண்டு, தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென்றும், அவ்வாறு எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுவருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யத் தவறின் தம்மை அழித்தாலும் பரவாயில்லை வெள்ளைக் கொடியினை பிடித்துக்கொண்டு, உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து தமது சொந்த இடங்களில் தாமே மீள்குடியேறுவோம் என்று சூளுரைத்துள்ளனர்.

தம்மை மீள்குடியேற்றம் செய்யும் வரை வலி.வடக்கு மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனார்.

Related Posts