Ad Widget

வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளருக்கு கொலை மிரட்டல்

நடைபெற்ற உள்ளுராட்ச்சி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி வலி .கிழக்கு பிரதேச சபையின் உபதவிசாளராக தெரிவு செய்யப்பட்ட திரு.மகேந்திரலிங்கம் கபிலனுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு அச்சுவேலி காவல்துறையினரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வலி.கிழக்கு பிரதேச சபையின் அச்சுவேலி தெற்கு வட்டாரத்தில் முதல்முறையாக போட்டியிட்ட திரு.ம.கபிலன் பிரதேச மக்களின் பேரபிமானத்துடன் வெற்றிபெற்று சபையின் உப தவிசாளராகவும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

சபையின் முதலாவது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பொதுமக்களுக்கான தீர்மானங்கள் தொடர்பில் சில தனிப்பட்ட நபர்கள் அதிருப்தியடைந்திருந்ததாகவும், பயிற்றோலை வீதியின் வெள்ளநீர் வடிகால் அமைப்பினை சீர் செய்வது தொடர்பாக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தினை எதிர்க்கும் முகமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிப்பதாக உபதவிசாளர் ம.கபிலன் தெரிவித்தார்.

இளவயதில் மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டு மக்களுக்கான உள்ளூர் ஆட்சிப்பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்த வேளையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts