யாழ். மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 31 ஆயிரத்து 284 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் பிரதேச செயலகங்களின் ஊடாக முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (13) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
தற்போது நிலவும் வறட்சியால், யாழ். மாவட்டத்தில் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர்த் தேவைகள் காணப்படுகின்றன. மேலும், தொழில் ரீதியாக 8284 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 12 ஆயிரம் விவசாயக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
மக்களின் குடிநீர் தேவைக்காக 6.6 மில்லியன் ரூபா நிதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி நிதி ஊர்காவற்துறை, நெடுங்கேணி, வேலணை, காரைநகர், நல்லூர், கரவெட்டி ஆகிய 6 பிரதேச செயலகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வறட்சியால் பாதிப்படைந்துள்ள குளங்களை புனரமைப்பு செய்வது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.