அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் பூங்கனியியல் தாய் தாவர பண்ணை அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (15) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து முதலாம் கட்டமாக 7 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு தெரிவு செய்யப்பட்ட தாய் தாவரங்களை (பழமரக்கன்றுகள்) பேணிக்காத்தல், புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல், கன்றுகளை விநியோகித்தல், அத்துடன் ஒட்டுமுறை பண்ணையாளர்களுக்கு மூலப்பொருட்களை வழங்குதல் போன்ற நோக்கத்தில் இந்த பண்ணை அமைக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த பண்ணை சுற்றுலா பயணிகளை கவருவதற்கும் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், திணைக்களங்கள் ஆகியவற்றுக்கு பயன்தரும் வகையில் அமைக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.