Ad Widget

வடமாகாணத்தில் நாளை காலை 6 மணி தொடக்கம் நண்பகல் 12 வரை ஊரடங்கு தளர்வு!!

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு மீளவும் மதியம் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாளை நண்பகல் 12 மணிக்கு நடைமுறைத்தப்படும் ஊரடங்குச் சட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொழும்பு, கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) காலை 6 மணிக்கு நீக்கப்படும்.

இம்மாவட்டங்களில் நாளை (24) நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அது 27 வெள்ளிக் கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

இம் மாவட்டங்களில் 27 நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று (23) பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அது 26 வியாழன் காலை 6 மணிக்கு நீக்கப்படுவதுடன், அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.

விவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Posts