Ad Widget

வடமராட்சி கிழக்கு, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளில் படையினர் பாவனையிலிருந்த வீடுகள், காணிகள் மக்களிடம் கையளிப்பு.

வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பட்சத்திலேயே தற்போதுள்ள சமாதான சூழலை நீடித்து நிலைபெறச் செய்ய முடியுமென யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு தாளையடி றோ.க.த.க பாடசாலையில் நேற்று இடம்பெற்ற காணிகளையும், வீடுகளையும் உரியவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 30 வருடகாலமாக யுத்தம் காரணமாக இங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒருசமாதான அமைதிச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

யுத்த சூழல் சமாதான சூழலாக மாற்றியமைக்கப்பட்டு இன, மத, மொழி பேதமற்று சமாதான நீரோட்டத்தில் இணைந்து தற்போது மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுள்ள சமாதான சூழல் நீடித்து நிலைபெற வேண்டுமாயின் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டுமெனவும் அதனூடாகவே சமாதான சூழலை பாதுகாத்து முன்னேற்றம் காணமுடியுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், மீண்டும் மக்கள் இருண்ட யுகத்திற்கு செல்லாமல் வளமான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்காக மக்கள் பணிசெய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது மக்களது தலையாய கடமையாகுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த பலவருடங்களாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் மக்களோடு இருந்து மக்களை பாதுகாப்பதிலும், மக்களுக்கான அபிவிருத்தி மேம்பாட்டு செயற்திட்டங்களை முன்னெடுப்பதிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அயராது உழைத்து வருகின்றார் என்றும் சுட்டிக்காட்டினார்.

நேற்றய நிகழ்வில் யாழ்.மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளின் கீழ் படைத்தரப்பினர் வசமிருந்த 50 ஏக்கர் காணிகளும், 7 வீடுகளும் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டன.

காணி மற்றும் வீடுகளின் உரிமைப்பத்திரங்களை யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வழங்கி வைக்க அவற்றை கரைச்சி பிரதேச செயலர் சத்தியசீலனிடமும், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரின் பிரதிநிதியான கணேசமூர்த்தியிடமும் ஆகியோரிடம் அமைச்சர் அவர்கள் வழங்கி வைத்தார்.

நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றினார்.

இதில் பொதுமக்களுக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது 52வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் அஜித் விஜயசிங்க மற்றும் 551, 552, 553 படைப்பிரிவுகளின் தளபதிகள் உள்ளிட்ட படைஉயரதிகாரிகளும் உடனிருந்தன.

daklas-haththurusinge

daklas-haththurusinge-2

ah08

Related Posts