Ad Widget

வடமராட்சி கிழக்கு கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் சுழியில் சிக்கி மரணம்!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள மணற்காட்டு கிராமத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் ஒருவன் சுழியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இப்பரிதாபகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணற்காடு கிராமத்தைச் சேர்ந்த அலோசியஸ் கயின்சன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவடைந்த பின்னர் நண்பர்கள் மூவருடன் சேர்ந்து இம் மாணவனும் கடலில் குளிப்பதற்காக வீட்டில் இருந்து சென்றதாகத் தெரியவருகின்றது.

கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கி மூர்ச்சித்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவரால் தெரிவிக்கப்பட்டது.

இவரது மரணம் குறித்து பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி திருமதி அன்ரலா வின்சன் தயான் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டு அதன் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Related Posts