வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் காளான் வளர்ப்பு தொடர்பான கருத்தமர்வு கடந்த சனிக்கிழமை (10.12.2016) நடைபெற்றுள்ளது. காளான் வளர்ப்பில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் அமைந்த இக்கருத்தமர்வு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில், கோண்டாவிலில் அமைந்துள்ள சேவாலங்கா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வடக்கின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காளான் செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
காளான் பீடைகொல்லிகள் பயன்படுத்தாமல் விளையும் நஞ்சற்ற ஒரு உணவு. போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குடிசைத் தொழிலாகக் குறைந்த முதலீட்டுடன் மேற்கொள்ளக்கூடிய ஒரு வாழ்வாதாரத் தொழிலாகவும் உள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு வடக்கு விவசாய அமைச்சு காளான் செய்கையை ஊக்குவித்து வருகிறது. பயனாளிகளைத் தெரிவுசெய்து ஐம்பது வீத மானிய அடிப்படையில் காளான் வளர்ப்புக்கான குடில்கள், உபகரணங்கள் வழங்குவதோடு பயிற்சிகளையும் வழங்கிவருகிறது.

