Ad Widget

வடக்கு விவசாய அமைச்சால் மண்வளம் தொடர்பாக விசேட கருத்தமர்வு

ஆண்டுதோறும் டிசம்பர் 5ஆம் திகதி உலக மண் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைக் கடைப்பிடிக்கும் நோக்குடன், வடக்கு மாகாண விவசாய அமைச்சு ஒருநாள் விசேட கருத்தமர்வு ஒன்றை நாளை சனிக்கிழமை (05.12.2015) யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியின் சங்கிலியன் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

‘மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற கருப்பொருளில் நிகழவுள்ள இக்கருத்தமர்வை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்துவைக்க உள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் நடைபெறவுள்ள தொடக்க அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், உணவு விவசாய நிறுவன திட்ட இணைப்பாளர் ச.பார்த்திபன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

கருத்தமர்வு காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது. மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் தலைமையில் நடைபெறவுள்ள காலை அமர்வில் ‘உயிர்ப்பான மண் – பேண்தகு விவசாயத்தின் ஆன்மா’ என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாய இரசாயனவியல் துறைத் தலைவர் கலாநிதி நளினா ஞானவேல்ராஜாவும், ‘மண்ணின் உயிர்ப்பை நிலைபேறாக்குவதற்கு மண்ணை மீட்டெடுத்தல்’ என்ற தலைப்பில் அறலகண்வில பிராந்திய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ்.நியாமுடீனும், ‘இலங்கையின் மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம்’ என்ற தலைப்பில் பேராதனை விவசாயத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு.கே.எம்.ஏ.கேந்திரகமவும் உரையாற்றவுள்ளனர்.

கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி தலைமையில் மாலை அமர்வு நடைபெறவுள்ளது. இவ்வமர்வில் ‘விவசாய நடவடிக்கையால் ஏற்படும் மண்வளம் குன்றலும் அதனைக் குறைப்பதற்கான அணுகுமுறைகளும்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் உதவி விவசாயப் பணிப்பாளர் கலாநிதி ரீ.கருணைநாதனும், ‘மண்ணை வளப்படுத்துவதில் நுண்ணங்கிகளின் பங்கு’ என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக பட்டப்பின் கற்கை நெறிகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தனும் உரையாற்ற உள்ளனர்.

Related Posts