Ad Widget

வடக்கு முதல்வர் பதவி விலக வேண்டும்: பட்டதாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமது பிரச்சினைகளை கேட்டுத் தீர்ப்பதற்கு முடியாவிட்டால் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பதவி விலக வேண்டுமென, வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தமது வேலையில்லா பிரச்சினையை தீர்க்குமாறு கோரி வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 25 நாட்களாக யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு இன்று (வியாழக்கிழமை) சென்றிருந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் பட்டதாரிகளை சந்திக்காமல் அங்கிருந்து திரும்பியுள்ளனர். இதனையடுதது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்குறித்தவாறு தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தின் புத்திஜீவிகளான தம்மை அந்நியர்களாக நினைத்து இவ்வாறு ஏறெடுத்தும் பாராமல் செல்வதாக குற்றஞ்சாட்டியுள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமது பிரச்சினைகளை கேட்க முடியாவிட்டால் அரசியல்வாதிகள் அவர்களது பதவிகளிலிருந்து விலக வேண்டுமென குறிப்பிட்டனர்.

Related Posts