Ad Widget

வடக்கு மக்களை பாதுகாக்க 10 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் உயிரையும் பணயம் வைத்து சேவையில்!! – பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு கோரிக்கை

“கோவிட் – 19 நோய்த்தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வடமாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்”

இவ்வாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவல் ஆ.கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் பொது மக்களுக்கான சுகாதாரத் துறையினரின் சிற்ப்பு அறிவித்தல் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வடக்கு மாகாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை ஒரு நோயாளி மட்டுமே இனம் காணப்பட்டுள்ளார். ஆயினும் கோவிட் -19 நோய் எமது மாகாணத்தில் பரவாது இருக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நோய்த் தொற்று வராமல் தடுப்பதற்கும், நோய் வந்தால் சிகிச்சை அளிப்பதற்கும் வடமாகாணத்தில் சுமார் பத்தாயிரம் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாக தமது உயிரையும் பணயம் வைத்து சேவையில் ஈடுபட்டு இருக்கின்றனர். அவர்கள் அனைவர் சார்பாகவும் உங்களிடம் ஓர் வேண்டுகோளை விடுத்து நிற்கின்றோம். தயவு செய்து உங்கள் வீடுகளில் இருந்து இந்த நோய் பரவாமல் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கோரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இது பற்றிய ஆலோசனைகளை அல்லது தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் இவ் விடயம் சம்மந்தமான தகவல்களை வழங்கவும் மாகாண சுகாதார சேவைகள் பணினையில் 24 மணி நேரமும் இயங்கும் பின்வரும் இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

021 222 6666
021 221 7982

தாங்கள் வீடுகளில் இருக்கும்போது தங்கள் குடும்பத்தில் யாருக்காவது அவசர மருத்துவ நிலை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டுமாயின் 1990 என்ற அவசர அம்புலன்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தாங்கள் ஏதாவது வைத்தியசாலையில் கிளினிக்குக்கு செல்பவராயின் உங்களுக்கு தேவையான மருந்துகளை உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு செய்துள்ளது. நீங்கள் கிளினிக் செல்லும் வைத்தியசாலையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் விவரத்தை தெரிவிப்பதன் மூலம் இச் சேவையினை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிடப்பட்ட அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியமுடியும்.

தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை பெற்றுக் கொள்வதாயின் அம் மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் உங்களது வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

உங்கள் பிரதேசத்தில் உள்ள மருந்தகங்களின் தொலைபேசி இலக்கத்தை அறிய வேண்டுமாயின் மேலே குறிப்பிட்ட அவசர அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொள்ளலாம். இச் சேவையை வழங்குவதற்கு தனியார் மருந்தகங்கள் தங்கள் மருந்துக்கான விலையுடன் கிலோ மீற்றர் ஒன்றிற்கு ஐம்பது (50) ரூபாய் அறவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில தனியார் மருந்தகங்கள் இச் சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளன.

இச் சேவையினை வழங்குவதற்கு இதுவரை பதிவு செய்யப்படாத மருந்தகங்களும் முன்வந்தால் தங்களுக்கான அனுமதி சுகாதார அமைச்சில் இருந்து பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களும் தங்களது விவரங்களை மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தரவும் – என்றுள்ளது.

Related Posts