Ad Widget

வடக்கு கிழக்கு வீடமைப்பு திட்டம் தைப்பொங்கலுடன் ஆரம்பம்: ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் பெறுமதி!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகளில், முதற்கட்டமாக 4,750 வீடுகளை அமைக்கும் பணி தைப்பொங்கல் தினத்துடன் –நாளை- ஆரம்பமாகவுள்ளது. தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி கையொப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

4,750 வீடுகளை அமைப்பதற்கான நிதி மாவட்ட செயலகங்களிற்கு ஒதுக்கப்பட்டு, வேலைத்திட்டங்கள் தைப்பொங்கலுடன் ஆரம்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடும் 10 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்படும்.

யாழ் மாவட்டத்தில் 1,500 வீடுகளும், கிளிநொச்சியில் 670 வீடுகளும், முல்லைத்தீவில் 630 வீடுகளும், வவுனியாவில் 450 வீடுகளும், மன்னாரில் 350 வீடுகளும், மட்டக்களப்பில் 625 வீடுகளும், திருகோணமலையில் 400 வீடுகளும், அம்பாறையில் 125 வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொண்ட குடும்பங்கள், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், வருமானம் குறைந்து குடிசைகளில் வாழும் குடும்பங்கள், கண்ணிவெடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வயோதிபர் மற்றும் இளம் சிறார்களை கொண்ட குடும்பங்கள் என்ற அடிப்படையில் பயனாளிகள் தெரிவில் முன்னுரிமையளிக்கப்படும்.

ஒவ்வொரு வீடும் 550 சதுர அடி பரப்பளவில் பயனாளிகளால் கட்டப்படும் வீடுகளாகவும், செங்கல், சீமெந்தினாலான இரண்டு படுக்கையறைகள், வரவேற்பறை, சமையலறை, சமையலறை மற்றும் கழிவறையை உள்ளடக்கியதாகவும், ஓட்டினால் ஆன கூரைகளாகவும் அமைவது கலாசாரத்துக்கு அமைவானதாக காணப்படுகின்றன.

மாவட்ட செயலாளர்கள் ஊடாகவும், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான கொடுப்பனவு கட்டம் கட்டமாக வேலைகளின் அடிப்படையில் பயனாளிகளிற்கு வழங்கப்படும்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts