Ad Widget

வடக்கில் 88 சதவீதமான காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது – யாழில் ஜனாதிபதி

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி பாடசாலை மற்றும் அதனையண்டிய காணிகளை எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் சீரமைப்பு மற்றும் மீள் செயற்படுத்தல் நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று (22) முற்பகல் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் கடற்றொழில் துறையை புத்தெழுச்சி பெறச்செய்யும் நோக்கில் ”மைத்திரி ஆட்சி – பேண்தகு யுகம்” செயற்திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா செலவில் மயிலிட்டித் துறைமுகத்தின் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தனது உரையில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:

இந்த மீன்பிடித் துறைமுகத்தையண்டிய தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்களின் காணிகளை மீளப்பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும்.

நாட்டில் மீண்டும் ஒரு போர் ஏற்படாத வகையில் செயற்படுதல் நாட்டு மக்களின் பொறுப்பாகவும் குறிக்கோளாகவும் காணப்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து, தேசிய சொத்துக்களை சிதைத்து, நாட்டினை பின்னோக்கி கொண்டு சென்ற கொடூர பயங்கரவாதம் எவ்வகையிலும் மீண்டும் உருவாக இடமளிக்க முடியாது.

போருக்குப் பின்னரான காலத்தில் தமது பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்றி சர்வதேசத்தினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்தும் நாட்டை விடுவித்துக்கொள்ள தற்போதைய அரசு கடந்த மூன்று வருட காலத்தினுள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு நாட்டிற்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினை உரியவாறு சகல மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தியை மீண்டும் மேற்கொண்டு மக்களின் அபிவிருத்திக்கான உரிமைகளை வென்றெடுக்கவும் அரசு முக்கியமாக கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த நோக்கிலேயே சிறப்பு ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டது. செயலணியினர் தொடர்ச்சியாக ஒன்றுகூடி முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்கின்றனர்.

எந்தவொரு ஜனாதிபதியும் எம்மைப்போன்று வட மாகாணத்திற்கு அடிக்கடி பயணம் செய்யவில்லை. வடக்கு மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களுக்கான தேவைகளை வழங்க வேண்டிய எனது பொறுப்பினை உரியவாறு நிறைவேற்றவே நான் இவ்வாறு அடிக்கடி இங்கு பயணம் மேற்கொள்கின்றேன்.

நாட்டின் வட மாகாணம் உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் பெரும் சவாலாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினை தொடர்பிலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட சட்டதிட்டங்கள் எதுவித தயக்கமும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் – என்றார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பிரதி அமைச்சர்கள் அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, த. சித்தார்த்தன் உள்ளிட்ட வட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் அந்தப் பகுதி மக்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts