Ad Widget

வடக்கில் முதியவர்களை கண்காணிப்பதற்கு ஆளுநர் விசேட திட்டம்!

வட மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர்.

ஆரோக்கியம் குன்றுதல், அறிவாற்றல் குறைதல், மனநிலையில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் செயல்திறன் குறைவடைதல் போன்றவற்றால் முதியவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

செயல்திறன் குறைபாடு காரணமாக வயது முதிர்ந்தோரால் தமது அன்றாட கடமைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படுகின்றது.

செயல்திறன் குறைபாடு என்பது, பலமின்மை, உடற் சமநிலையின்மை, பார்த்தல், கேட்டல் திறன்கள் குறைவடைதல் மற்றும் நடமாடும் திறனின்மை, சுறுசுறுப்பின்மை, எலும்புகள் எளிதில் முறிவடைதல் போன்றவற்றைக் குறிக்கும்.

வயது முதிர்வு சார்பான நோய்களான, ஞாபக மறதி, இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுக்கள் தேய்வடைதல் மற்றும் எலும்புகள் பலம் குன்றுதல் நீரழிவு புற்றுநோய், பாரிசவாதம், சமிபாட்டு குறைபாடு, உடற் பருமன் மற்றும் நீணட கால நோய்களால் அவர்களது செயற்திறன் குறைவடைதலை எதிர் கொள்கின்றனர்.

இவற்றைவிட ஆபத்தான குடும்ப, சமூகப் பாதிப்பு, மன உளைச்சல் போன்றனவும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் சாராச் சவால்களாகும்.

இதற்காக வடமாகாணத்தில் முதியோரின் தேவைகளைக் கணிப்பிடுவதற்கான முன்னோடி ஆய்வு இதுவரை முறையாக அடையாளப்படுத்தப்படாத நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை அடையாளப்படுத்தும் செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய, வடமாகாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் வடமாகாண சமூகசேவை திணைக்களம் என்பன இணைந்த வழி நடத்தலின் கீழ் இடம்பெறவுள்ளது.

இவ் ஆய்வானது முதியோர் வாழும் சமூகத்தில் அவர்களது சுகாதார சமூகத் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை எவ்வகையில் தீர்க்க முடியும் என்ற வழிவகைகளை ஆராய்வதாகும்.

உற்சாகமாக முதுமை எய்திய முதியோர் நீண்ட காலம் கௌரவமாக வாழ தரம்மிகு வாழ்வை அடைவதனூடாக அவர்களை மேம்படுத்தவும் ஆளுநர் விரும்புகின்றார்.

இதற்காக விஷேடமாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய அலுவலர் ஊடாக நேர்காணல் மூலம் வினாக்கொத்துக்களை பூரணப்படுத்தித் தேவையான பரப்பில் விபரங்களைச் சேகரிக்கவுள்ளார்.

வினாக்கொத்தானது சமூகம் தொடர்பான விபரங்கள் உணவு, உறையுள், குடிநீர் தொடர்பான அடிப்படைத் தேவைக்குரிய தகவல்களையும் முதியோரின் உடல் உள ஆரோக்கிய நிலைமை தொடர்பிலும் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts