வடக்கில் இருந்து ராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் மக்கள் கோருவது, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தவே என ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட இலங்கை ராணுவத் தளபதி இதனை கூறியுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மகேஷ் சேனாநாயக்க, “நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது. இந்த நிலையில் வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுமாறு புலம்பெயர் மக்கள் கோருகின்றனர்.
அவ்வாறு செய்வதன் ஊடாக மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தவே அவர்கள் எதிர்பார்கின்றனர். புலம்பெயர்ந்தோர் வாழும் அந்ததந்த நாடுகளில் தங்களது இருப்பைத் தக்கவைத்து கொள்ளவும், நிதிதிரட்டவும் அவர்கள் வடக்கில் இருந்து ராணுவத்தை வெளியேற்றுமாறு கோருகின்றனர்.
ஆனால் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுடன் கதைத்தால் 80 வீதமானோர் ராணுவத்துடன் வாழவே விரும்புவதாக கூறுவர்.
1996 ஆம் ஆண்டில் இருந்தே குடாநாட்டு மக்கள் ராணுவத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். தற்போது வடக்கு கிழக்கில் எந்த விடயத்தை செயற்படுத்தவும் ராணுவதற்கே அதிகாரம் உள்ளது.
புனர்வாழ்வு பெற்ற 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் சமூகமயப்படுத்த வேண்டியதும் ராணுவத்தின் பொறுப்பாகும். வடக்கு வைத்தியசாலைகளில் அதிகம் சேமித்து வைக்கப்பட்டிருப்பது ராணுவத்தின் இரத்தம்” என்றும் கூறினார்.