வடக்கில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம் வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்றில் இராணுவத்தினரும் இராணுவத் தளபாடங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பாக உலங்கு வானூர்தி ஒன்று ஆகாயத்தில் பறந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, வடக்கில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காவல்துறையினரும் முப்படையினரும், புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள், தற்கொலை குண்டு அங்கி போன்றன மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து சோதனைகளை படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமான நபர்களை கைது செய்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் தொடர்பில் அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர்.