Ad Widget

வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!- ஓரிரு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் காரணமாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே காணப்படுகிறது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வியானது மிகவும் முக்கியமானதாகும். எனவே, அதனை மேம்படுத்துவது அவசியமாகும். பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிப்போர் எண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018இல் அதிகரித்துள்ளது. அது பாராட்டத்தக்கது.

இந்நிலையில், மருத்துவ பீடத்திற்கான மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பீட மாணவர்களின் எண்ணிக்கையை 300ஆக அதிகரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Related Posts