Ad Widget

ராஜீவ் கொலையில் புலிகளுக்கு தொடர்பில்லை – ஃபெராஸ் அஹ்மத்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு என்பது சந்தேகம் என்று புதிய புதிருடன் ஒரு புத்தகம் வெளியாகி உள்ளது.

assassination-of-rajiv-gandhi-an-inside-job-faraz-ahmad

ராஜீவ் காந்தி கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய தூக்கு தண்டனை தீர்ப்பு, தற்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது.

கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக் கொள்கிறது. இன்னமும் ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் விசாரணை செய்யப்படவில்லை.

அத்துடன், ராஜீவ் கொலை குறித்து பல புத்தகங்கள் வந்துவிட்டன. தற்போது டெல்லியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஃபெராஸ் அஹ்மத் “Assassination of Rajiv Gandhi AN INSIDE JOB”என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ராஜீவ் கொலை என்பதே ஒரு அரசியல் ஆதாயத்துக்கு நடந்த கொலைதான். சுப்.பி.ஐ சொல்வது போல தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பிருக்குமா என்பது சந்தேகமே என்கிறது இப்புத்தகம்.

இது குறித்து நூலாசிரியர் ஃபெராஸ் அஹ்மத், ஜூனியர் விகடன் வாரஇதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது,

‘ராஜீவ் காந்தி கொலையின் பின்னணி பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன், ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ், பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள்.

1989ஆம் ஆண்டு தேர்தலில் வி.பி.சிங்கிடம் தோல்வியடைந்த ராஜீவ் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழ்நிலையில் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்பட்ட பின்னர்தான் அனுதாப அலை ஏற்பட்டது. அப்படியும் காங்கிரஸால் 240 இடங்களில்தான் வெற்றிபெற முடிந்தது.

மற்ற கட்சிகளின் ஆதரவுடன், நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதனால் அவர் கொலை செய்யப்படவில்லை என்றால் அவரால் ஆட்சிக்கு நிச்சயமாக வந்திருக்க முடியாது.

‘ராஜீவ் காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தன்னையும் தன்னுடைய எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தையும் அழித்துவிடுவார் என்று பிரபாகரன் பயந்தார். இதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்பதுதான், இந்தக் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ முன்வைத்த காரணமாகும்.

ஆனால், இது எவ்வளவு மடத்தனமானது என்பதை அறியலாம். ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வரக்கூடிய சூழ்நிலையும் இல்லை. அப்படியே வந்தாலும் படைகளை இலங்கைக்கு அவரால் அனுப்பவும் முடியாது.

முன்பு அவர் அமைதிப்படையை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுடனான உடன்பாட்டின் அடிப்படையில் அனுப்பினார். பின்னர் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரேமதாசா தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. ராஜீவ் காந்தி பதவியில் இருந்தவரை படைகளை திரும்பப் பெறுவதில் விரும்பம் இல்லாமல் இருந்தார்.

அதே ஆண்டு டிசெம்பர் மாதம் ராஜீவ் காந்தி அதிகாரத்தையும் இழந்தார். 1990ஆம் ஆண்டு தி.மு.க ஆதரவுபெற்ற வி.பி.சிங் ஆட்சிக்கு வந்து இந்திய படைகளும் திரும்பி வந்தன.

இறையாண்மை பெற்ற இலங்கை போன்ற நாடுகளுக்கு, நாம் நினைத்தமட்டில் படைகளை அனுப்ப முடியாது. இதனால் பிரபாகரனுக்கோ, புலிகள் அமைப்புக்கோ ராஜீவ் காந்தி மீது பயமோ அச்சமோ கிடையாது.

புலிகளுக்கு அவரது கொலைக்கான தொடர்பில் சம்பந்தமே இல்லை. இந்தக் கொலையில் விடுதலைப் புலிகள் உறுதியாக ஈடுபடவே இல்லை என்று நான் சவால் விடவும் இல்லை. இந்த விவகாரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் வழக்கை விசாரித்தவர்கள் சொல்லும் கூற்றுக்கு அர்த்தமில்லை என்பது என் கருத்து.

1990ஆம் ஆண்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் கொல்லப்பட்டார்கள். அதில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்தக் குழுவில் சிவராசன் ஈடுபட்டு இருப்பது பற்றி சொல்லப்பட்டது. அந்த சமயத்தில் இவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றனர்.

ராஜீவ் கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு இருந்தால் அடுத்த நிமிடமே இங்கிருந்து தப்பியிருப்பார்கள். ஏன் போகவில்லை? 1991 மே 21ஆம் திகதி மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் கொலை நடந்தது. கிட்டத்தட்ட ஜூன் 23ஆம் திகதி வரை சிவராசன் சென்னையில்தான் இருந்தார்.

சம்பவம் நடந்த ஸ்ரீபெரும்புதூருக்கும் கடற்கரைக்கும் மிகப்பெரிய தூரம் கிடையாது. புலிகள் சாலையில் பறப்பதைவிட படகில் பறப்பதில் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆனால், அவர் அப்படி போகவில்லை. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆட்டோவில்தான் சென்னைக்கு எல்லோரும் ஒன்றாகத் திரும்பி வந்துள்ளனர்.

மறுநாள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நளினியை, சிவராசன் அவரது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டுபோய் விட்டுள்ளார். இடையில் சுபா, நளினி, பத்மா ஆகியோருடன் சிவராசன் திருப்பதிக்கும் சென்று வந்துள்ளார். இவர்கள் என்ன பக்தி புலிகளா?

24ஆம் திகதி செய்தித்தாளில் மனித வெடிகுண்டு தாணுவின் புகைப்படம் வெளிவந்து விடுகிறது. அது தடயவியல் வல்லுநர் சந்திரசேகர் லீக் அவுட் செய்ததால் வந்தது. அதன் பிறகு சிவராசன் சாலை மார்க்கமாக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். அவர் யாழ்ப்பாணம் தானே சென்றிருக்க வேண்டும்.

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு ஒருநாள் முன்பு சிவராசன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த கனகசபாபதி என்பவரை டெல்லிக்கு அனுப்பி வாடகை வீடு பார்க்கச் சொல்லியிருந்தார். மற்றொரு குற்றவாளியான ஆதிரையையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டார்.

இவர்கள் எதற்காக டெல்லி சென்றனர்? அப்போது இருந்த பிரதமரைக் கொல்லவா? அல்லது செங்கோட்டையைத் தகர்க்கவா? இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காரணம் இந்த விவகாரத்தில் புலிகளின் தொடர்புகள் சந்தேகத்துக்குரியவை என்பதை விளக்கத்தான்’ என்று ஃபெராஸ் அஹ்மத் கூறியுள்ளார்.

Related Posts