Ad Widget

“ராஜீவ் காந்தி கொலைக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை” – தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை உபயோகித்து வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக அரசின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்விட்ஸர்லாந்தினை மையமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இயங்கும் புதிய அமைப்பொன்றினால் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற கருத்தினை வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கை சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம் மற்றும் அரசியற்துறைப் பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகிய இருவரின் கையெழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களால், தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோன்றிய இயக்கமாகும். நாங்கள் போராட்டக்குழுவோ, ஆயுதக்குழுவோ, வன்முறை இயக்கமோ அல்ல. மாறாக தமிழீழத்தில் நடந்த அரச வன்முறைகளையும், அரச ஆதரவு ஆயுதக்குழுக்களின் வன்முறைகளையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.

எங்கள் ஆயுத மௌனிப்பிற்குப் பிறகும், இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைக் காத்துவந்துள்ளோம். எனினும் எமது மக்களுக்கு இதுவரை விடிவோ, தீர்வோ கிடைக்கவில்லை. இன்றளவும் எமது மக்கள் திட்டமிட்ட இனவழிப்பிற்கே உட்படுத்தப்படுகின்றார்கள். ‘புலிகள் இல்லை என்றார் இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்” என்று அறிவுரை கூறியவர்கள் எல்லாம் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்.

பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்து தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றது. தொடர்கின்ற இதுபோன்ற தவறான பிரசாரத்தால் எமது மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களின் உயிர் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்று உரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவைத் தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ எதிராக நாங்கள் ஆயுதம் ஏந்தவுமில்லை. எங்களது ஆயுத மௌனிப்பின் 10 வருடங்களுக்குப் பின்னரும் கூட புலிகளையும், தமிழீழ மக்களையும் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புபடுத்துவதைக் காணும் போது, இந்தக் கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித்திட்டமாகவே தோன்றுகின்றது. தொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம்மக்கள் மீது இனியும் இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களைப் பதிய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்விடயம் தொடர்பில் எமக்கு தொடர்பில்லை என புலிகள் இயக்கம் முன்பிருந்தே கூறிவருகின்றது. 2002 ஏப்ரல் 10ஆம் திகதி விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘அது ஒரு துன்பியல்” என பிரபாகரன் பதிலளித்தார்.

இந்திய அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இருந்த உறவைத் தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே இந்திய முன்னாள் பிரதமரின் படுகொலை என உறுதியாக நம்புகின்றோம். ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் புலிகளின் மீது சுமத்தப்படும் அபாண்டமான பழி உடனடியாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்றும், புலிகள் மீதான களங்கம் நீங்குமானால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும் என்றும், எமது மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் கனியும் என்றும் நம்புகின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts