Ad Widget

யாழ் மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்! – இராணுவத்தளபதி

யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை எதிர்பார்த்து காத்திருப்பதாக யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ’30 வருடங்கள் துரதிஸ்டவசமாக இராணுவம் ஆயுதங்களை தாங்கி போராடவேண்டிய நிலை உருவானது. ஆனால் ஆயுதத்தால் பேச முனைந்தவர்களுடனேயே இராணுவம் போராட்டம் நடாத்தியது.

அது தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் அல்ல. போர் காலத்திலும், போருக்கு பின்னரும் தமிழ் மக்களுடன் இராணுவத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

போர் காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்களை சந்தித்தார்கள் என்பது எமக்கு நன்றாக தெரியும். 30 வருடகால போரில் பல அழிவுகள் இடம்பெற்றதும் தெரியும். அவற்றை 9 வருடங்களில் மீட்டெடுக்க முடியாது.

ஆனால் இராணுவத்தால் முடிந்தளவு மீட்டுக் கொடுப்பதற்கு இராணுவம் முயற்சிக்கும். அந்த முயற்சியில் 100 வீதம் இராணுவம் முயற்சிக்கும். குறிப்பாக இராணுவம் வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது, மலசல கூடங்களை அமைத்துக் கொடுக்கிறது.

வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்கும் மேலாக இராணுவத்தின் வசம் உள்ள காணிகளில் கூட அந்த காணிகளுக்கு சொந்தமான மக்களுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தென்னை மரங்களையும், பனை மரங்களையும் இராணுவம் நாட்டியிருக்கின்றது.

இதேபோல் கரையோர வள பாதுகாப்பு மற்றும் வனவள பாதுகாப்பு போன்றவற்றிலும் இராணுவம் தொடர்ச்சியாக அக்கறை காட்டி வருகின்றது. யாழ்.மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழும் நாளை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

Related Posts