Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினால் படுகொலை செய்யப்படவர்களின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!

தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவத்தினரால், யாழ் போதனா வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட உறவுகளின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நினைவுச்சுடர் ஏற்றி வைத்தார். தொடர்ந்து வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆகியோர் உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, தீபமேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி இந்தியப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், ஊழியர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

வலிகள் நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு ஆண்டும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் நடத்திய கோரத்தாண்டவம் ஏராளம் என்ற போதிலும், அதில் யாழ். போதனா வைத்தியசாலை தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts