Ad Widget

யாழ் பல்கலை மாணவர்களின் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம்!

14852998_1785173318176923_4919515415316463328_oயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், யாழ்  பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் தலைமையில் 16 பேர் கொண்ட மாணவர் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனும் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன் மீண்டும் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறாது என்றும்  ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சந்திப்பில் மாணவர்களின் வேண்டுகோளுக்கமைய மரண விசாரணை அறிக்கையை விரைவுபடுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி அந்த அறிக்கை கிடைத்தவுடன் குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து  கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே. ரஜீபன் இன்றைய சந்திப்பில் 100 வீதம் நம்பிக்கை இல்லை. ஆனால் மாணவர்கள் முன்னிலையில் ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழிகளை கூறுவோம். மாணவர்கள் ஏற்றுக்கொண்டால் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவோம். இல்லாவிட்டால்  தொடரும்  போராட்டம்  என்றார்.

01. மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான முழுமையான விளக்கமொன்றை
ஜனாதிபதி வழங்க வேண்டும்,

02. கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் குற்றவாளியை இனங்கண்டு விரைவில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்,

03. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை தாமதப்படுத்தக்கூடாது,

04. படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களுக்காக அவர்களது பெற்றோருக்கு
ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்டஈட்டை அரசாங்கம் விரவைில் வழங்கிவைக்க வேண்டும்,

05. தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமல்ல,
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் இவ்வாறான சம்பவமொன்று இனியும் இடம்பெறக்கூடாது என்ற உறுதியை ஜனாதிபதி வழங்க வேண்டும்,

ஆகிய கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.

Related Posts