Ad Widget

யாழ். பல்கலை பதற்றம்: பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை- மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், போக்குவரத்துப் பொலிஸாரும் கலைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் அத்துமீறி உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எக்காரணம் கொண்டும் அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை.

இன்று மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர்.

அத்துமீறி உள் நுழைந்ததை திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சிறப்பு அதிரடிப் படையினர் 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களிலும் பொலிஸார் இருவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவரை சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் துரத்தி வந்தனர்.

இளைஞர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் ஆயுதங்களுடன் அவர்களை வளாகத்துக்குள் துரத்திச் சென்றனர்.

எனினும் துரத்தி வந்த இளைஞர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு கலை நிகழ்வுகளுக்காக நின்றிருந்த மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

இதனால் அத்துமீறி பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படையினர் நுழைந்தனர் எனவும் அவர்கள் வெளியேறாத வகையில் பிரதான வாயிலை மூடுமாறும் மாணவர்கள் நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

எனினும் பிரதான வாயில் மூடப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப் படையினரும் பொலிஸாரும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் தம்மை அச்சுறுத்திய சிறப்பு அதிரடிப் படையினரை வெளியேற அனுமதித்ததாகவும் அத்துமீறி நுழைந்த சிறப்பு அதிரடிப் படையினர் அச்சுறுத்திய சம்பவம் குறித்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெருமளவு மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் பிரதான வாயிலில் கூடினார்கள். இதனால் அவ்விடத்தில் சில மணிநேரம் பதற்றமாக சூழல் காணப்பட்டது.

இதேவேளை, பல்கலையில் நேற்றையதினம் பட்டமளிப்பு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts