Ad Widget

யாழ்.பல்கலை. சிற்றுண்டிச் சாலை நடத்துபவருக்கும் விளக்கமறியல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனின் ஒளிப்படத்தை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிற்றுண்டிச்சாலை நடத்துபவர் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவ பீடத்துக்கான சிற்றுண்டிச் சாலையும் சோதனையிடப்பட்டது. அங்கு தியாக தீபன் திலீபனின் உருவப்படம் மீட்கப்பட்டுள்ளது. அதனால் சிற்றுண்டிச் சாலையை நடத்துபவர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஒழுங்குவிதிகளின் கீழ் அறிக்கையிடப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts