Ad Widget

யாழ். பல்கலையின் கவனயீர்ப்புப் போராட்டம்!

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்கு நடவடிக்கைகளை தமிழ் நீதிமன்றங்களுக்கு மாற்றுமாறு கோரியும் தமது வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த கோரியும் கடந்த 9 நாட்களாக உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் உயிரை மதித்து மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் உடனடியாக தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரியும் ஏனைய அரசியல் கைதிகள் விடயத்தில் உரிய தீர்வை சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேநேரம், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் யாழிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்கு முன்னால் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts