Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!!

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொரோனா பீ.சி.ஆர் ஆய்வு கூடத்தில் பணியாற்றிவந்த 4 மருத்துவ ஆய்வு கூடத் தொழில்நுட்பவியல் பயிலுநர்கள் உள்ளகப் பயிற்சிக்கான நியமனம் பெற்றுச் சென்றனர்.

இதனால், பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து மருத்துவ பீடத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே உடனடியாக ஒப்பந்த அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் நிதியில் இருந்து தற்காலிகமாக தேவையான ஆளணியை உள்வாங்குவதற்குத் துணைவேந்தர் பணித்திருந்தார்.

அதற்கமைய, நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நேர்முகத் தேர்வின் ஊடாக மூன்று பேரை நியமிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் விரைவில் பீ.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts