இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று பிற்பகல் புதுடெல்லி திரும்பினார்.
நேற்று மாலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலம் அவர் புதுடில்லி நோக்கி பயணமானார்.
இலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9வது மாநாட்டில் கலந்து கொள்வதாகற்காக நேற்று இலங்கைக்கு விஜயம் செய்த அவர், கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டதோடு, முக்கியத்துவம் வாய்ந்த இரு ஒப்பந்தங்களையும் ஏற்படுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் அவர் சந்தித்தார்.
அத்துடன் இலங்கையில் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த கண்காட்சி ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். இந்த விஜயத்தின்போது, அவர் யாழ்ப்பாணம் வந்து வடமாகாண முதல்வரைச் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போதிலும், இறுதி நேரத்தில் அவரது நிகழ்ச்சி நிரலில் அது இணைத்துக் கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.