கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று மாவட்டச் செயலகத்துக்கு விசேட காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ். கூழாவடிப் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினரின் தேவைகளுக்கு அபகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவித்தும், இப்படியான பணிகளை உடனே தடுத்துநிறுத்துமாறும் கோரி கடந்த திங்கட் கிழமை பொதுமக்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களால் முற்றுகைப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது.
இதன்போது மகஜர்களைக் கையளிக்க வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அநாகரீகமான முறையில் செயற்பட்டதாகவும், இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களை குழுவாக உள்ளே வர அனுமதிக்கப்போவதில்லை எனவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களால் தன்னிடம் கையளிக்கப்பட்ட மகஜர் தொடர்பில் வடக்கு ஆளுநருக்கும், சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறசேனவுக்கும் தெரியப்படுத்தியுள்ள தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.