Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு மாவட்ட கட்டளைத் தளபதி ஆலோசனை!!

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கை முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. அதனை அறிந்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்தவற்றை அகற்றியிருக்க முடியாதா? பல்கலைக்கழக வளாகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் இடம்பெறாது என உறுதிப்படுத்துங்கள்”

இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பீடாதிபதிகளுக்கு ஆலோசனை வழங்கினார் யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையால் தீர்மானிக்கப்படதற்கு அமைய பீடாதிபதிகள் மற்றும் பதிவாளர் யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை இன்று பலாலியில் சந்தித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலை தொடர்பில் இந்தச் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.

நாட்டின் நிலவும் தற்போதய சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராணுவத்தின் உதவி அவசியமானது என பீடாதிபதிகள் யாழ்ப்பாண மாவட்டத் தளபதியிடம் சுட்டிக்காட்டினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாட்டின் அனைத்து பாகங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதனால் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை கோருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 3ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றபோது சில விரும்பத்தகாத விடயங்கள் இடம்பெற்றதனை இராணுவத் தளபதியிடம் தெரிவித்த அவர்கள் அந்த விடயங்கள் தமக்கு மன வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, எனது அதிகார வரம்புக்கு உள்பட்ட விடயங்களை நான் செய்து தருவேன் என உறுதியளித்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்ற ஒரு தேடுதலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னறிவுப்புடேயே நடத்தப்பட்டது. ஆகவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள், பதாகைகளை அகற்றியிருக்க உங்களால் முடியவில்லையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் கட்டப்பட்ட சட்டத்துக்கு புறம்பானவைகள் தொடர்பில் உங்களுக்குத் தெரியாது நடந்தவையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான விடயங்கள் இடம்பெறாது என உறுதிப்படுத்தப்படவேண்டும் – என்றார்.

Related Posts