Ad Widget

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராகப் போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் அமைதியாக இருந்தது ஏன்?

அண்மையில் யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் அநீதிக்கெதிராக போராடியபோது படித்தவர்கள், பாமரர்கள் என்ன செய்தார்கள்? என யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு அநீதியினைத் தட்டிக் கேட்பதற்கு அந்த மாணவிகள் ஓடிச் சென்ற இடங்களைப் பார்க்கின்றபோது எனக்கு வெட்கமாக இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா நேற்றைய தினம் யாழ். நல்லூர் சிறீ துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

மண்ணுக்காகவே போராடியது மகாபாரதம். பெண்ணுக்காகப் போராடியது இராமாயணம். பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் நீதி தவறினான். கண்ணகி மதுரை மாநிலத்தினை எரித்தாள். பசுமாடு நீதி கேட்டு மனுத்தாக்கல் செய்த போது மனு நீதி கண்ட சோழன் மனு நீதி வழங்கினான்.

யாழ்ப்பாணத்தில் நீதி வேண்டி ஓடிய காட்சிகள் அண்மையில் அரங்கேறியது. அதனை விட ஜனாதிபதியிடம் காலில் விழுந்து மனுக் கொடுத்த காட்சிகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும். பொறுப்பு வாய்ந்தவர்கள் பொறுப்புக் கூறத் தவற வேண்டாம். ஏனெனில், அந்த மாணவர்கள் ஒரு குழந்தைகள்…. அவர்கள் நீதிமன்றத்தில் நீதி கோருகின்ற சம்பவம் அனைவரையும் கலங்க வைத்த ஒரு சம்பவமாகத் தான் நான் காணுகின்றேன்.

படித்தவர்கள், பாமரர்கள், பண்பாடு உள்ளவர்கள் யாழ்ப்பாணம் கலாசாரத்தின் சிகரம் எனக் கூறுபவர்கள் ஆகியோர் அமைதியாகத் தான் இருந்தார்கள். நீதிகள் வீதியில் இறங்கும் போது மக்கள் அனைவரும் அமைதியாகத் தானிருந்தார்கள். பிரச்சினைகள் வருவது இயற்கை. அதில் தவறு இல்லை. ஆனால், பிரச்சினையினைக் கையாளும் விதம் முக்கியமானது. அனைவரும் இதனை உணரவேண்டும் என நீதித் துறை பாசறையிலிருந்து அறைகூவலாக விடுக்கின்றேன்.

சட்டத்திற்கு, சட்டவாட்சி நிலைகூறும் நீதிக்கு முக்கியத்துவமளித்து அவற்றிற்குத் தலை வணங்கும் புதிய யாழ்ப்பாணத்தினை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்புக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார்.

Related Posts