Ad Widget

யாழில் வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு முயற்சி

யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன்றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாள்வெட்டு நடத்த முயன்ற நிலையில் குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர்.

நேற்றய தினம் மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்கு முன் 4 இளைஞர்கள் நின்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியால் 2 மோட்டார் சைக்கிளில்களில் வாள்களுடன் வந்த குழுவினர், குறித்த இளைஞர்கள் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞர்கள் அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து தப்பியுள்ளனர்.

எனினும் வீதியில் நின்றிருந்த மேற்படி இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மீது கோடாரியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு மக்கள் கூடியதுடன், பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வாள்வெட்டு குழு தப்பி சென்றுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் வந்து இளைஞர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts