Ad Widget

யாழில் பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு

யாழில் இனந்தெரியாத நபர்களினால், வீட்டின் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டதில், வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டினுள் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளனர்.

அத்தோடு, வீட்டிலிருந்த உடமைகளை உடைத்து சேதமாக்கியதுடன், வீட்டு வளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரே தாக்குதலை மேற்கொண்டதாகவும், குறித்த நபர்கள் தப்பிச் சென்றபோது, தாம் கொண்டு வந்திருந்த வாள் ஒன்றினை தவறவிட்டு சென்றதாகவும் வீட்டிலிருந்தோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, கடந்த சனிக்கிழமை யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ, யாழில் இயங்கிய வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts