Ad Widget

யாழில் ‘புகையிரத நகரம்’: பணிகள் ஆரம்பம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்.புகையிரத நிலையத்தில் ‘புகையிரத நகரம்’ நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார்.

dak-suntharam-arumainayagam-GA

8.5 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்.புகையிரத நிலையத்தை சுற்றி இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள ஸ்டான்லி வீதி, தெற்கு பக்கமாகவுள்ள யாழ் புகையிரத நிலைய வீதி, கிழக்கு பக்கமாகவுள்ள இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கமாகவுள்ள வைத்தியலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களும் பொதுமக்களுக்கு தேவையான தொடர்பாடல் வசதிகள், ரயில் பணியாளர்களுக்கான விடுதிகள், பேருந்து, வாகன தரிப்பிடங்கள், நவீன வசதிகளுடனான விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளடங்கலாகவும் இந்நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த சுற்றாடலில் யாழ். மாநகர சபையின் அலுவலகம் நிறுவப்படவுள்ளது. இதற்காக செலவிடப்படவுள்ள நிதி தொடர்பிலான விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts