யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நெல்சிப் திட்டத்தின் கீழ் 12 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமையதிபதி திணைக்களத்தின் வடபிராந்திய அலுவலகம், இன்று வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது.
கணக்காய்வாளர் தலைமையதிகாரி எச்.ஏ.சமரவீர இந்த அலுவலகத்தைத் திறந்து வைத்தார். மேற்படி நிலையத்தைத் திறந்து வைத்து பேசிய அவர் கூறியதாவது,
மாகாண மட்டம், உள்ளூராட்சி மட்டம் என யாழ் மாவட்டத்தில் ஏழு விதமான கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009ஆம் ஆண்டிலிருந்து பல கணக்காய்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது கணக்காய்வு நிலையத்தால், வெளிப்படைத்தன்மையோடு உண்மையான கணக்காய்வுகளையே மேற்கொள்வதுடன், நல்ல உறவுகளையும் அந்தந்த அமைப்புக்களுடன் உள்ள அதிகாரிகளுடன் பேணி வருகின்றனர்.
எமது நோக்கம் எந்தவித பேதமுமின்றி நேர்மையான முறையிலே சேவை செய்வதாகும். இதற்கு வடக்கு மாகாணம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்சுமி ரமேஸ், உதவிப்பொதுக் கணக்காய்வாளர் ஞா.தேவஞானன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.