Ad Widget

யாழில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் மூவர் குணமடைந்தனர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரிசோதனைகளின்போது தொற்று கண்டறியப்பட்டிருந்த 22 பேரில் 9 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இறுதியாக வெலிகந்த வைத்தியசாலையில் இருந்து குணமடைந்த மூவர் யாழ்ப்பாணத்தில் அவர்களது வீடுகளுக்குத் திரும்புகின்றனர் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்று வீடுதிரும்பும் 3 பேரையும் சேர்த்து மொத்தமாக 9 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதுவரை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 156 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பரிசோதனை மேற்கொண்டவர்களில் நேற்று முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த ஒருவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்தமாக இதுவரை 2 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் தொற்று அறியப்பட்டுள்ளனர். தற்போது சந்தேகத்தில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைவிட, வைத்தியசாலைக்கு வெளியே 636 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களில் 20 பேருக்கு (முழங்காவில் தனிமைப்படுத்தல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 4 பேர் உட்பட) தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

இந்நிலையில் வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளான 22 பேரில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 13 பேர் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts