Ad Widget

யாழில் காணிகளை துரிதமாக விடுவிக்கும் நடவடிக்கை: காணி உரிமையாளர்களுக்கு ஆளுநர் கோரிக்கை

யாழ்ப்பாண மாவட்டத்தில் படைத்தரப்பு மற்றும் பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை அடையாளம் கண்டு அவற்றை துரிதகதியில் மீள கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் துரிதப்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுவதாக வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் நிலைகொண்டுள்ள தனியார் காணிகள் தொடர்பான விபரங்களை காணிகளின் உரிமையாளர்கள் அறியத்தருவதன் மூலம் அந்த காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு உரிமை கோருபவர்களிடம் மீளக்கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனடிப்படையில் இதற்காக தயாரிக்கப்பட்ட விசேட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து உரிமைகோரலுக்கான தகுந்த ஆதாரத்துடன் அல்லது தகுந்த விளக்கத்துடன் மீளப்பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு காணி உரிமையாளர்களை கோருவதாக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பப் படிவத்தினை ஆளுநர் செயலகம், யாழ் மாவட்ட செயலகம் , பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் www.np.gov.lk என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ள முடியும்.

காணி உறுதியின் பிரதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இணைத்து எதிர்வரும் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் ‘காணி கோரல் ‘ வட மாகாண ஆளுநர் செயலகம், பழைய பூங்கா, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Related Posts