சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் அதிலிருந்து தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி பெண் ரயிலில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் இருந்த பெட்டியின் வாயில் ஊடாக இறங்குவதற்கு இறங்கு தளம் இல்லாத காரணத்தால் வேறு பெட்டி ஊடாக சென்று இறங்க முற்பட்ட வேளையில் ரயிலும் நகர்ந்ததால் பெண் கீழே விழுந்து படுகாயமடைந்திருந்தார்.
படுகாயமடைந்த பெண்ணை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் மகனை பார்க்கச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி கோவிற்குடியிருப்பைச் சேர்ந்த 53 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழந்தார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த மீன் வியாபாரியே நேற்று (16) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே பலியானார்.
விபத்து குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.