Ad Widget

யாழில் ஆவா குழுவிற்கு சவால் விடும் புதிய குழு?

கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று வீடுகள், தேனீர் கடை, வாகனத்தரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ அழைப்பில் நேரலையாக ஒருவருக்கு காண்பித்துள்ளது.

இந்தச் சம்பவங்கள் நேற்று(புதன்கிழமை) மாலை 3.45 மணி முதல் 4.30 மணிக்குள் 45 நிமிடங்களுக்குள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலக்கத்தகடுகளற்ற மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்த அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது. கும்பலிடம் இருந்த வாள்கள் தெரிந்தன, அவை மிகப் பெரியளவில் இருந்தன.

வந்தவர்களில் ஒருவர் தனது அலைபேசியின் ஊடாக வீடியோ அழைப்பை ஒருவருக்கு எடுத்து தமது அடாவடிகளை நேரலையாகக் காண்பித்தார் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரம்படி வீதி மற்றும் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது.

உடமைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. அவர்களை அச்சுறுத்தும் வகையிலேயே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இணுவில் சந்திக்கு அண்மையாகவுள்ள தேனீ்ர் கடை மற்றும் வாகனத்தரிப்பு நிலையம் என்பன தாக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து தாவடி பாடசாலை வீதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த கும்பல் செயற்பட்டுள்ளது.

இணுவில் மற்றும் தாவடிப் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுடைய வீடுகள் உடமைகளே இதன்போது சேதமாக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts