Ad Widget

யாருடைய ஜனநாயகத்தை பாதுகாக்கிறீர்கள்?: கூட்டமைப்பிடம் கேள்வியெழுப்பும் சி.தவராசா!

“இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற கோசம் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனாலேயே இன்று ஐ.தே.முன்னணிக்கு ஆதரவை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூட்டமைப்பும் பெருமிதமடைகின்றது. எம் நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்தவர்களின் ஜனநாயகமாகவே இன்றுவரை காணப்படுகின்றது. சகல இனத்தவர்களையும் உள்ளடக்குகின்ற ஜனநாயகம் நாட்டில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு பிரச்சினைகளையும், அழிவுகளையும் சந்தித்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நாம் யாரின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற விடயமும் இன்று கேள்விகுறியாகவே அமைகின்றது.“வடக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி த.தே.கூ செயற்படுதலே இன்றைய காலகட்டத்தின் தேவையாக அமைகின்றது.

இன்று இலங்கையின் அரசைத் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் இவ் வாய்ப்பானது சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் ஆகும். இச் சந்தர்ப்பத்தைச் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சாதுரியமாகப் பாவித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமை ஆகும்.

ஆனால் இக் காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் நிலைப்பாடு இராஜதந்திரமா, அல்லது ஓர் சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளது. நேற்றைய தினம் அவர்களின் பதின்னான்கு பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையெழுத்திடப்பட்டு ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் “இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேரந்த பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கடந்த 26ம் திகதிக்கு முன்னர் இருந்த ஐ.தே.மு தலைமையிலான அரசாங்கத்தினை மீளமைப்பதற்கு ஆதரவளிப்போம் என்பதோடு ஐ.தே.முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினைப் பெறக் கூடியவர் என நீங்கள் கருதும் நபரைப் பிரதம மந்திரியாக நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அவர்களின் செயற்பாடு இதுதான் முதற் தடவை அல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இதே போல ஓர் சந்தர்ப்பம் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலும் கூட அது தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டதா என்பதும் கேள்விக் குறியாகவே இருக்கின்றது.

இச் சூழலைப் பாவித்து எமது அடிப்படை அரசியற் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஓர் அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டினை ஐ.தே.மு அல்லது ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றிருக்க வேண்டுமென்று எதிர்பார்;ப்பது நடைமுறைச் சாத்தியமற்ற ஓர் கோரிக்கையாகவே அமையும்.

ஏனெனில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், தேவை ஏற்படும் பட்சத்தில் சர்வஜனவாக்கெடுப்பிற்கும் செல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், நிர்வாக ரீதியாகவும், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ விடயங்கள் உள்ளன. இன்று வனப் பாதுகாப்புத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பன பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களிற்குக் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை மீறிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மாகாண சபைக்கு தற்போது வங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருப்பது அரசியலமைப்பின் சரத்துகள் அல்ல, மாறாக மாகாண சபைகள் சட்டம் ஆகும். மாகாண சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை இல்லை. சாதாரண பெரும்பான்மையுடன் திருத்தி அமைக்கலாம். இவற்றிற்கு மேலாக அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனோர் தெபாடர்பான விடயங்கள், படையினர் வசமிருக்கும் அரச காணிகளை விடுவிப்பது என்பனவும் உடனடியாகச் செயற்படுத்தப்பட வேண்டிய அரசியல் வேலைத்திட்டங்கள் ஆகும்.

இவ்வாறாக நடைமுறையில் செயற்படுத்தக் கூடிய விடயங்களிலாவது ஐ.தே.முன்னணியிடமிருந்து உறுதிப்பாட்டைப் பெற்றுக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரையறையுடனான நிபந்தனையுடன் ஆதரவினை வழங்குவது அல்லது இவ்விடயங்களை ஐ.தே.முன்னணிக்கும், மகிந்த தரப்பினரிற்கும் பிரஸ்தாபித்து யார் கூடிய விடயங்களைச் செயற்படுத்துவதற்கு உறுதிப்பாட்டினைத் தருகின்றார்களோ அவர்களிற்கு ஆதரவு வழங்குவதே தமிழ் மக்களின் நலன் சார்ந்து செயற்படுவதாக அமையும். அவ்விரு தலைவர்களும் எவ்வித உறுதிபாட்டினையும் தர மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் பக்கச்சார்பற்று செயற்படுவதே தமிழ் மக்களின் நலன்கனை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக அமையும்.

இன்று ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்ற கோசம் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனாலேயே இன்று ஐ.தே.முன்னணிக்கு ஆதரவை வழங்கி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாக கூட்டமைப்பும் பெருமிதமடைகின்றது. எம் நாட்டில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மை இனத்தவர்களின் ஜனநாயகமாகவே இன்றுவரை காணப்படுகின்றது. சகல இனத்தவர்களையும் உள்ளடக்குகின்ற ஜனநாயகம் நாட்டில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு பிரச்சினைகளையும், அழிவுகளையும் சந்தித்திருக்க வேண்டிய தேவையில்லை. ஆகவே நாம் யாரின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்றோம் என்ற விடயமும் இன்று கேள்விகுறியாகவே அமைகின்றது.

பெரும்பான்மை இன மக்களின் ஜனநாயகத்தினையும், பெரும்பான்மையின மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி வரையப்பட்டிருக்கும் அரசியலமைப்பினையும் மற்றும் பெரும்பான்மையின மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்திச் செயற்படும் சட்டம் ஒழுங்கு நிர்வாகக் கட்டமைப்பினையும் பாதுகாப்பதனை முன்னிலைப்படுத்தாது தமிழ் மக்களின் நலன்களினை முன்னிலைப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு செயற்படுதலே சாலச் சிறந்ததாக அமையும்.

Related Posts