அமைச்சர் மேர்வின் சில்வா யாழிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு நல்லூர் கந்தனை இன்று வழிபாடு செய்துள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மேர்வின் சில்வா நல்லூர் ஆலயத்திற்கு வருகைதந்து வழிபாட்டினையும் மேற்கொண்டிருந்தார்.
இன்றைய தினம் நல்லூரானை தரிசிக்க வந்த மேர்வின் சில்வாவும் அவருடைய பரிவாரங்களும் ஆலய வளாகத்திற்குள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தியும் பாதணிகளை கழற்றாமலும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் மு.ப 12 மணியில் இருந்து பி.ப 2மணிவரைக்கும் மட்டுமே ஆலயச்சூழலில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் வாகனங்கள் ஆலய வீதியால் செல்ல யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் அடியவர்கள் பிரதிட்டை செய்யும் இடங்களில் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
அத்துடன் காலணிகளை அணிந்து கொண்டும் ஆலய சூழலில் செல்ல அனுமதித்து இருக்கவில்லை. இவை எதனையும் கவனத்தில் கொள்ளாது மேர்வினும் அவரது பரிவாரங்களும் வாகனங்களை நிறுத்தியும் , காலணிகளை அணிந்தும் உட்சென்று வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பொலிஸார் ஒரு சிலர் கூட தங்களுடைய காலணிகளைக் கழற்றாது இவ்வாறு செயற்பட்டமைக்கு கந்தன் அடியார்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கு தடை விதிக்கும் யாழ். மாநகர சபை ஆலயசூழலில் மகோற்சவ கால பணிமனை அமைத்திருக்கும் நிலையிலும் ஏன் இவற்றை கண்டு கொள்வதில்லை. மக்களுக்கு ஒரு சட்டமும் இராணுவம் , பொலிஸ் மற்றும் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கு வேறொரு சட்டமும் அமுல்ப்படுத்தப்படுகின்றனவா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.