Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது.

இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்று ஆரம்பமாகிய நிலையில், நேற்று இரண்டாவது நாள் நினைவுகூரலுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்டோர் நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் ஒன்றுகூடினர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

அத்தோடு அஞ்சலிக்காக அங்கே வந்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோருடன் பொலிஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் குறிப்பிட்ட நேரத்திற்குள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் ஏனைய உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts